Monday 12 October 2015

வேட்டி விளம்பரத்தில் மறைக்கப்பட்ட பெரியார்

             
   பெருந்தலைவர் தந்தை பெரியார்... என்று புகழ் வாய்ந்த தலைவர் பெயர்களை அடுக்கிப் பாடல் வடிவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்த ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் திடீரென்று பெரியார் காணாமல் போய்விட்டார்.இது தற்செயலாக நடந்தது என்று நம்ப முடியவில்லை.அறிவியல்/பகுத்தறிவு வாதிகள் மராட்டியத்திலும் கர்நாடக த்திலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்;சிலருக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் பெரியார் மறைக்கப்படுவது அவற்றோடு தொடர்புடையது என்று நம்பாமல் இருக்க முடிய வில்லை.
  ஆனால் பெரியாரை அண்மையில் வெளிவந்த திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகவுரையில் -பெண்ணுரிமை பற்றிய விவாதத்தினூடாக-அம்மொழி பெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார்.அவ்வாறு குறிப்பிடும்போது, 'social reformer and thought-changer Periyaar E.VRaasami'என்று அடைமொழிகிறார்.அது மட்டுமன்றித் தம் மொழிபெயர்ப்பை,'To the conflicted yet interwoven memories of Chakravarthi Rajagopalachari and Periyar E.V.Ramasami' என கொள்கை முரண் கொண்ட இணைபிரியா நண்பர் இரிவருக்கும் காணிக்கையாக்கி யுள்ளார்.அட! யாரந்த மொழிபெயர்ப்பாளர் என்கிறீர்க்ளா? அவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று இந்திய ஆட்சி ப்பணித் தேர்வில் வென்று,தமிழக அரசின் நிர்வாகப் பணியில் தொடங்கிப் படிப்படியாக உயர்ந்து இந்தியக் குடியரசுத்தலைவரின் செயலாளராக,தென்னாப்பிரிக்கா,இலங்கை,இங்கிலாந்து நாடுகளில் இந்திய்த்தூதராக ,மேற்கு வங்க ஆளுநராக...தொடர்ந்து அரசுப்பணி நிறைவுக்குப்பின் இப்போது அசோகா பல்கலைக்கழகத்தின் தனியுயர் பேரசிரியராக இருக்கிறார்.அவர்தாம் மகாத்மா கந்தியடிகளின் மகன் வழிப் பேரனும் மூதறிஞர் ராஜாஜியவர்களின் மகள் வயிற்றுப் பேரனுமாகிய கோபாலகிருஷ்ண காந்தியவர்கள்.அவருடைய தற்சார்பின்மையையும் பார்வைக்கூர்மையையும் உணர மீண்டும் ஒரு முறை காணிக்கையைப் பாருங்கள்.மூதறிஞர் ராஜாஜியை ராஜகோபாலாச்சாரி என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஈ.வெ.ரா.வைப் பெரியார் என்கிறார்.இந்தத்துல்லியத்தின் பின்னே ஒரு சமூக வரலாறே அடங்கியுள்ளது.விரிப்பிற் பெருகுமாதலின் வேறொரு முறை வாய்ப்பின் விரிப்பேன்.பெரியார் கடிதோச்சி மெல்ல எறிந்தவர்.சொல்லில் சுடுசரம்,உள்ளத்தில் நீரோடை.இடித்துத் தள்ளுவதும் அடித்துக்கொல்லுவதுமாய்த் திரியும் அடிப்படைவாதக்கும்பலுக்குப் பெரியாரைப் புரியாததில் வியப்பில்லை.



பட உதவி: http://sathiyamweekly.com/wp-content/uploads/2015/08/CRPeriyar.jpg

No comments:

Post a Comment